Saturday, January 14, 2017

வாழ்வகம்

 

முகப்பு தோற்றம்


தோற்றம்


கண் பார்வையற்ற, பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளின் வாழ்வை வளப்படுத்தும் ஒரு நிறுவனமாக 1988ம் ஆண்டு யூன் மாதம் 29ம் திகதி கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மையார் அவர்களால் தெல்லிப்பழை காசி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் தனியார் வீடொன்றில் 12 விழிப்புல வலுவிழந்த பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.
வாழ்வக நிறுவனமானது கடந்த 28 வருடங்களாக இலங்கை வாழ் தமிழ் பேசும் விழிப்புல வலுவிழந்த பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும் அதன் ஊடான வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காகவும் அயராது பாடுபட்டு வருகின்றது. நடைமுறையில் உள்ள கல்வி முறைகளுக்கமைவாக விழிப்புல வலுவிழந்த பிள்ளைகள் தமது கல்வியை பெற்றுக்கொள்ள வழி சமைத்து வரும் இந்நிறுவனமானது இலங்கையில் உள்ள ஒரேயொரு தனித்துவமான தொண்டு ஸ்தாபனமாக விளங்கி வருகின்றது.

ஸ்தாபகர்


தமக்கென வாழாது பிறருக்கென வாழ்ந்த பெருமாட்டி கலாநிதி அமரர் அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மையார் தன் வாழ்வையே மற்றவர்களின் வாழ்வுக்கு வளம் சேர்க்கின்ற ஒளடதம் ஆக்கி, தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராய் வாழும் அற்புதப் பிறவிகள் மிகவும் அரிதாய் தான் இந்த அவனியிலே உதிக்கின்றார்கள். அந்த வரிசையிலே 11.09.2016 வாழ்ந்து  எல்லோருடைய இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அன்னை செல்வி அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மையார் அவர்களும் ஒருவர். விழிப்புலனற்றவர்கள் வாழ வழி தெரியாமல் தவித்து நின்ற போது, அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அவனியிலே அனைவர்க்கும் சமமானவர்களாய் அவர்களை ஆக்கும் அரும்பணியில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்தி, அதில் வெற்றியும் கண்டவர் இந்த பெருமை மிகு அன்னை.
அன்னை செல்வி அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மையார்

.
இலங்கையில் கண்பார்வையற்ற மாணவர்கள் சாதாரண பாடசாலைகளிற் சாதாரண மாணவர்களோடு இணைந்து கல்வி கற்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இலங்கை ஒருமுகப்படுத்தப்பட்ட  கல்வித்திட்டம் 1972ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையின் தென் பகுதிகளிலே ஒருமுகப்படுத்தப்பட்ட கல்வித்திட்டத்தின் கீழ் பணியாற்றுவதற்குப் பலர் முன் வந்தனர், அனால் யாழ்ப்பாணத்தின் இப்பணியினை முன்னெடுப்பதற்கு யாருமே முன்வரவில்லை. இந்த நிலையிற்றான் அன்னையவர்கள் 01.01.1972ல் யாழ்ப்பாணம் வந்து இவ் விசேட ஆசிரியர் பணியினைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதுவரை இங்கிருந்த பார்வையற்றவர்களுக்கு, கைதடி நவீல்ட் பாடசாலையில் வெறுமனே ஆரம்ப கல்வி மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.அதையும் ஒரு சிலர் மட்டுமே பெற்றிருந்தார்கள்.பெற்றவர்களும் கூட அதற்கு அப்பால் எதுவும் செய்ய முடியாதவர்களாக, கல்வியால் ஒரு மனிதன் அடையக்கூடிய எந்த ஒரு பயனையும் அடைய முடியாதவர்களாய் நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனற்றவர்களாய் நலிவுற்றுப் போயிருந்தனர்.
வாழ்வக  அன்னை அவர்கள் 11.09.2006 மதியம் அமைதியாய் இறைவனடி சேர்ந்தார். அன்னையின்  விருப்பம் போலவே அவரின் பொன்னுடல் வாழ்வக வளாகத்தில் சமாதியாக விதைக்கப்பட்டது. அத்துடன் அவர்களின் விருப்பத்திற்கிணங்க அவரது முதல் மாணவன் திரு.ஆறுமுகம் ரவீந்திரன் அவர்கள் அன்னையின் பணியை தொய்வேதுமின்றி முன்னெடுப்பதற்காக 17.09.2006ல் வாழ்வக தலைமை பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
விழிப்புல வலுவிழந்த மாணவர்களை ஆற்றலும் ஆளுமையும் மிக்க நற்பிரஜைகளாக்கும் சீரிய பணியை வாழ்வகம் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் உட்படுத்தற் கல்விச் செயன்முறைக்கு அமைவாக இம்மாணவர்கள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, சுன்னாகம் இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் சாதாரண மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்று வருகின்றனர்.
பாடவிதான, இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் ஏனைய நிகழ்வுகள் போட்டிகள் போன்றவற்றிலும் சிறப்பாக பங்கு கொள்வதற்கான வலுவூட்டல்கள் வாழ்வகத்தால் வழங்கப்படுகின்றன. பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் கணிதம், தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்துப் பாடங்களுக்குமான மேலதிக வகுப்புக்கள் தேவைக்கேற்ப நடத்தப்படுகின்றன.
மாணவர்களின் கணித அறிவை மேம்படுத்தும் வகையில் விசேட கணனி வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன. வாழ்வகத்திலே ஒரு கணனி அலகு இயங்கி வருவது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.
சங்கீதம்,  நடனம், மிருதங்கம், ஓகன், வயலின் போன்ற கவின்கலை வகுப்புக்களும் உள்ளத்தையும் உடலையும் மேம்படுத்தக்கூடிய வகையில் வாராந்த கூட்டுப்பிரார்த்தனைகள் யோகாசன வகுப்புக்கள் போன்றனவும் சிறப்பாக நடைபெறுகின்றன. அத்தோடு மாணவர்களின் பொது அறிவு விருத்திக்கு உதவும் வகையில் ஒலி நூலகம் ஒன்றும் சிறப்பாக இயங்கி வருகின்றது. மாதாந்தம் பௌர்ணமி தினங்களில் முழுநிலா நாள் பொது அறிவுத்தேடல் என்னும் தலைப்பில் விசேட கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. வருடாந்தம் தமிழ்த்தினம், ஆங்கிலத்தினம் போன்ற நிகழ்வுகளை ஒழுங்கு செய்து மாணவர்களின் மொழி அறிவு விருத்திக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.அவ்வப்போது  சுற்றுலாக்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
விழிப்புல வலுவிழந்த பிள்ளைகள் அமைதியான ஆனந்தமன ஒரு சூழலில் அனைத்து வசதிகளையும் பெற்று கல்வியிலே உயர்ந்து தம் வாழ்வை வளம்படுத்திக் கொள்வதற்கான அரியதொரு வாய்ப்பினை இவ் வாழ்வகம் வழங்கி வருகின்றது. விழிப்புல வலுவிழந்த பிள்ளைகளின் அறிவுக்கண்ணைத் திறந்து அவர்களின் அகக்  கண்ணுக்கு ஒளி கொடுப்பதன் மூலம் அவர்களை ஆற்றல் மிக்கவர்களாக உருவாக்கும் வாழ்வகத்தின் பணிகள் தொடர்கின்றன.

நோக்கங்கள்















1.விழிப்புல வலுவிழந்த மாணவர்களின் கல்வி, அறிவு வளர்ச்சிக்கு சகல வழிகளிலும் உதவுதல்.
2.பேரியக்க நுண்ணியக்கத் திறன்களை விருத்தி செய்வதன் ஊடக அவர்களின் ஆற்றல்களை மேம்படுத்தல்.
3.கலை , கலாசாரத்துறை மேம்பாட்டுக்கும், பொழுதுபோக்கு வசதிகளுக்கும் ஆவனை செய்தல்.
4.விழிப்புல வலுவிழந்த மாணவர்களுக்கு பராமரிப்பு மட்டும் தங்குமிட வசதிகளை செய்து கொடுத்தல்.
5.நிவாரணமும், புனர்வாழ்வுக்கு அளிக்கும் பணிகளில் ஈடுபடுதலும், உதவுதலும், ஊக்குவித்தலும்.
6.விஞ்ஞான உலகின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வேண்டிய சகல வளங்களினையும் பெற்றுக்கொடுத்தல்.
7.மேற்படி நோக்கமுடைய தேசிய, சர்வதேச நிறுவனங்களுடன் ஒத்துழைத்தல்.
8.தொழில் பயிற்சி மற்றும் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள ஆவன செய்தல்.
9.இலங்கை வாழ் விழிப்புல வலுவிழந்தவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பாடுபடுதல்.


முக்கிய வளர்ச்சிப்படிகள்


1. 2006ம் ஆண்டில் வாழ்வாக வெளிக்கள இல்லம் சமூக சேவை திணைக்களத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட்து.
2. 2007 தைப்பூச நன்நாளில் வாழ்வாக அன்னை உறங்கியிருக்கும் இடத்தில் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களால் பிரார்த்தனை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட்து.
3. 11.09.2007ல் அன்னை அவர்களின் திரு உருவச்சிலை வாழ்வகத்தலைவர் திரு. ஆ. ரவீந்திரன் அவர்களால் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் வாழ்வாக புதிய அலுவலக கட்டடத்திற்கான சில கட்டுமான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
4. 21.03.2008ல் வாழ்வாக மாணவர்களுக்கான கணனி அலகு சுன்னாகம் EUT நிறுவன உரிமையாளர் திரு. ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுடன் கணனிச் செயற்பாடுகள் STP  நிறுவன உரிமையாளர் திரு. சிவலிங்கம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
5. 05.07.2008ல் வாழ்வகத்திற்கான இணையத்தளம் யாழ் பல்கலைக்கழக கணனித்துறைத் தலைவர் கலாநிதி. மகேசன் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட்து.
6. 2008ல் வாழ்வகக் கொடி, மாணவர்களுக்கான சீருடை என்பன அறிமுகப்படுத்தப்பட்ட்து.
7. 08.02.2009 அன்று ஆண்கள் விடுதி உடுவில் பிரதேச செயலர் திருமதி. மஞ்சுளா சதீசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட்து.
8. 17.11.2010ல் திரு. பாலசுந்தரம் அவர்களின் நிதி உதவியோடு நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
9. 11.11.2010ல் வாழ்வாக உணவு மண்டபம் சமூக சேவைத் திணைக்களப் பணிப்பாளர் திருமதி.விஜயலட்சுமி  ரமேஷ் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட்து.
10. 11.11.2011ல் மேல்மாடி உணவு மண்டபம் கெளரவ ஆளுநர் மேஜர் ஜெனரல் G.A சந்திரசிறி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
11. 11.12.2011ல் வாழ்வாக அன்னையின் நினைவாலயம் நோர்வே சிவசுப்பிரமணிய ஆலய இந்து இளைஞர் அறிவாலயத்தினரின்  உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு கலாநிதி. ஆறுதிருமுருகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட்து.
12. 21.11.2011ல் மாணவர்களுக்கான நவீன குளியலறை S.V முருகேசு நிறுவனத்தினரால் அமைத்து வழங்கப்பட்ட்து.
13. 28.10.2012ல் செல்லா மண்டபம் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமாகிய முருகேசு சந்திரகுமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
14. திரு. திருமதி. மோகன் கோமதி தம்பதிகளின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட கற்றல் கூடம் திரு.திருமதி. கேதீஸ்வரன் சுசீந்திர தம்பதியினரால் திறந்து வைக்கப்பட்ட்து.

1 comment:

  1. இதைப் போன்ற அமைப்புக்களைப் பற்றி உலகம் அறிய செய்த உங்கள் முயற்சிக்கு நன்றி

    ReplyDelete